'என் கிரிக்கெட் பேட்ட நீ தானப்பா திரும்ப இங்க கொண்டு வந்து வச்ச?' என் மகன் வருண் அதட்டலாய்க் கேட்டான். கம்ப்யூட்டர் திரையில் மூழ்கியிருந்த நான், அவன் காட்டிய திசையில், சுவற்றோரத்தில் சாத்தி வைக்கப்பட்டிருந்த அவனது புதிய 'ஸ்டான்போர்ட்' (S F) Autograph 'ஆங்கில மர' கிரிக்கெட் பேட்டைப் பார்த்தேன். மழுப்பலுடன் 'சாரிடா' என்றேன். சென்ற இரண்டு வருடங்களாக வருண் கிரிக்கெட் பயிற்சிக்குச் செல்கிறான். இந்த இரண்டு வருடங்களில், இது அவனது மூன்றாவது பேட். ஒரு மாதிரி, சுமாராக, பரவாயில்லாமல்,நல்லாவே (மைகேல் மதன காமராஜன் நாகேஷ் ஸ்டைலில்) பேட் செய்கிறான். 'ஏன் தான் இப்படி இந்த பேட்டை சும்மா சும்மா எடுக்கறியோ தெரியல!'. பேட்டை தனது விளையாட்டுப் பைக்குள் சொருகி அவசரமாக வெளியே புறப்பட்டுச் சென்றான். அதானே! அவன் பேட்டை நான் எதுக்கு சும்மா சும்மா எடுக்கணும்? என் கிரிக்கெட் வாழ்க்கை தான் ஏறக்குறைய முடிந்தாயிற்றே....இல்லை இன்னும் உண்டா? சாய்ந்து உட்கார்ந்து 1978 முதல், இன்று வரையிலான எனது 37 ஆண்டுகால எனது கிரிக்கெட் வாழ்க்கையை (!!??) அசை போட ஆரம்பித்தேன்.
அப்பா பாரத ஸ்டேட் வங்கி ஊழியர். மூன்று வருடங்களானால் கட்டாய இட மாற்றம். இதனால் எங்கள் படிப்பும் திருப்பூர், விருதுநகர், மார்த்தாண்டம், மதுரை, சோழவந்தான் என்று மும்மூன்று வருடங்களாய் வெவ்வேறு ஊர்களில் தொடர்ந்தது. அவர் தமிழ் நாடு கிரிக்கெட் சங்கப் போட்டியில், பாரத ஸ்டேட் வங்கி அணிக்காக விளையாடியுள்ளார். இருந்தாலும், எங்களுக்கு அவர் கிரிக்கெட்டை அறிமுகப்படுத்தியது, நான் ஏழாவது படிக்கும் போதுதான். குழித்துறை கிராமத்தில், தென்னை மட்டை பேட் செதுக்கி விளையாடியது பெரும்பாலும் எங்கள் வீட்டில் மட்டும் தான் இருக்கும். "ஒரு நல்ல கிரிக்கெட் பேட் வாங்க வேண்டும்" என்பது அப்போதைய ஆசை. எட்டாம் வகுப்பில் நுழைகையில் தந்தைக்கு மதுரைக்கு மாற்றம் ஆனது. மகத்தான டி. வி . சுந்தரம் உயர்நிலைப்பள்ளியும், அதன் ஆசிரியர்களும், பள்ளிச் சுற்றுச் சூழல்களும், அதுவரை சிறிய கிராமப் பள்ளிகளில் மட்டுமே படித்த எனக்கு பெரும் பிரமிப்பை ஏற்ப்படுத்தியது. பள்ளியில் சேர்ந்து இரண்டு மூன்று நாட்கள் இருக்கும். ஒரு நாள் மதிய உணவு இடை வேளை முடிந்து வகுப்புக்கு செல்கையில், பள்ளியின் விளையாட்டுத் திடல் பக்கம், வயல்களில் கொக்குகள் நிற்ப்பது போல் வெள்ளை உடுப்பில் பலர் நின்றிருக்க, என்னவென்று அறிய ஆவலுடன் விரைந்தேன். அங்கு, மதுரை-புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்தது. நான் நேரில் பார்க்கும் முதல் கிரிக்கெட் போட்டி அதுதான். நெருப்பினால் ஈர்க்கப்படும் விட்டில் பூச்சி போல், திறந்த வாய் மூடாமல் ஓரத்தில் அமர்ந்து விளையாட்டை ரசிக்க ஆரம்பித்தேன். மதுரை பாட்டிங். அப்பொழுதுதான் ஒரு விக்கட் விழுந்திருக்கும் போல். புதிதாக, கண்ணாடி அணிந்த ஒரு மட்டையாளர் (இன்னும் அவர் பெயர் ஞாபகம் இருக்கிறது..லலித் குமார்!!) ஆடுகளத்தில் நுழைந்தார். பாட்டிங் கிரீஸ் வந்தவர், பாட்டை ஒருக்களித்து, தள்ளிப்பிடித்து (என்ன மட்டையை இப்படிப் பிடிக்கிறார்? விளையாடத் தெரியாதோ?) நடுவரைப் பார்த்தார். அவர் ஏதோ சைகை செய்ய, சாக் கட்டியால் பாயில் கோடுகள் போட்டார். அன்று தான் மட்டையாளர் Guard எடுப்பதை முதல் முறை பார்க்கிறேன். அவர் எதிர்கொண்ட முதல் பந்தை வீசியவர் ஒரு சுழற்ப் பந்து வீச்சாளர். அந்தப் பந்தை லாவகமாக முட்டியில் அமர்ந்து கால் திசைப் பக்கம் திருப்பி விட்டார். அது போன்ற ஒரு நேர்த்தியான sweep shotஐ இன்று வரை வேறெங்கும் பார்த்ததில்லை. பந்து தரையில் இருந்து இம்மியும் எழாமல் உருண்டோடி நான் அமர்ந்த பக்கம் எல்லைக் கோட்டைத் தாண்டி வந்தது. அந்து பந்தைப் பிடித்து மீண்டும் மைதானத்திற்குள் வீசினேன். நிஜமான கிரிக்கெட் பந்தை கையாளுவது அது முதல் முறை. வழு வழுப்பும், சொர சொரப்பும் ஒரு சேர, இப்படியுமொரு பொருள் இருக்குமா உலகத்தில்!! எனக்குப் பெருமை தாளவில்லை. அன்றில் இருந்து எல்லா கிரிக்கெட் போட்டிகளுக்கும் நான் கட்டாயமாக ஆஜர்! ஸ்ரீதர், ராஜமன்னார், முரளி கிருஷ்ணன்....அன்றைய மதுரை அணியின் ஜாம்பவான்கள் விளையாட்டு பாணி எல்லாம் அத்துப்படி. செங்கல்பட்டு Vs இணைந்த மாவட்டங்கள் போட்டி நினைவுகள் இன்னும் எனது மனதில் அவ்வப்போது ஓடும். ராஜமன்னார், தனது 'எட்டடி' (குள்ளமாக இருந்த எனக்கு அவர் நிஜமாகவே எட்டடி உயரம் போலத்தான் தோன்றியது!!)
உயர உடலை வளைத்து, குத்திப் போட்ட bouncer பந்தை, N.P. மாதவன் அனாயாசமாக hook செய்ய, அந்தப் பந்து கண்ணிமைக்கும் நேரத்தில், fine leg பகுதியில், கூட்டத்தை சமாளிக்கும் சாரண தன்னார்வனாக (scout volunteer) இருந்த என் செவுளை முகர்ந்து பார்த்துச் (நல்லவேளை முத்தமிடவில்லை) சென்றது இன்னும் என் மனத் திரையில்...பிரமிப்பாக!! சமயம் கிடைக்கையில், மற்றும் விளையாட்டு நேரங்களில் அதே மைதானத்தில் நாங்களும் கிரிக்கெட் ஆடுவோம். ஒரே நேரத்தில் 5-6 போட்டிகள் அருகருகே நடக்கும். எவன் அடிக்கும் பந்து எப்போது எவன் மண்டையை உடைக்கும் என்று தெரியாது!! ஒவ்வொரு அணியிலும் ஓரிரண்டு பேர் வித விதமான கிரிக்கெட் பேட் கொண்டு வருவார்கள். "நானும் ஒரு கிரிக்கெட் பேட் வாங்க வேண்டும்".. நினைத்துக் கொள்வேன். அந்தப் போட்டிகளில் ஒருவாறாக என்னை மட்டையாளன் மற்றும் விக்கெட் கீப்பர் (batsman cum wicket keeper) என்று அடையாளம் காட்டியிருந்தேன்.
எங்கள் பள்ளி கிரிக்கெட் டீமின் கேப்டன் வெங்கட்ராமன். ஒரு சகலகலா வல்லவன். விக்கெட் கீப்பர் ரங்கநாதன். அடுத்த வருடம் (நான் ஒன்பதாம் வகுப்பில் படிக்கையில்) டி. வி. எஸ். பள்ளி கிரிக்கெட்அணிக்காக நடந்த தேர்வில் ரங்கநாதனுக்குப் போட்டியாக நான் களமிறங்கினேன். நார் பாய் (coir mat) பிட்சில், நிஜ கிரிக்கெட் பந்து வைத்து தேர்வு. இதுவரை நான் பெறாத அனுபவம்...என் உற்சாகத்துக்கு அளவில்லை!! தேர்வை நடத்தியது எங்கள் விளையாட்டு வாத்தியார் நஸ்ருதின் சார். மாணவர்களை இரண்டு அணிகளாகப் பிரித்திருந்தார். எங்கள் அணி பந்து வீச்சு . முதல் முதலாகக் வெள்ளையும் சொள்ளையுமாகக் கால் காப்பு (pads), கையுறை (keeping gloves) அணிந்து, நார்ப் பாய் மைதானத்தில் நிஜமான கிரிக்கெட் ஆடப்போகும் பரமானந்தத்தில் நான்!! "ஸ்ரீ, பந்தை விடாம பார்த்துக்கிட்டே இருக்கணும். Mat பிச்ல வழுக்கிட்டு ஸ்விங் ஆகி வரும், ஜாக்கிரதை" எனது பள்ளித் தோழன் மற்றும் தேர்ந்த மட்டையாளன் V .ஸ்ரீநிவாசன் எச்சரித்தான். நான் சமர்த்தாகத் தலை ஆட்டினேன். முதல் ஓவர் வீசியது சுரேஷ் என்ற வேகப்பந்து வீச்சாளர். ஓடி வந்து பந்தை வீசினார். அவர் கையில் இருந்து விடுபட்டு , காற்றில் ஸ்விங் ஆகி வளைந்து மிதந்து பிட்சில் விழுந்தவுடன் வழுக்கி கொண்டு, அதே வேளை ஒரு விதமான 'மெது இயக்கத்தில்' (slow motion) என் முகத்திற்கு நேராக வந்த அந்தச் சிகப்புக் கோளத்தை, ஏதோ வசியத்திற்கு கட்டுப்பட்டவன் போலப் பார்வையால் தொடர்ந்தேன். மறு கணம் என் வாயில் யாரோ ஓங்கிக் குத்தியது போல் பொறி கலங்கிக் கீழே விழுந்து தடுமாறி எழுந்தேன். வாயில் இருந்து ரத்தம் வழிந்து வெள்ளைச் சட்டையெல்லாம் சிவப்பாயிற்று. துப்பினால் ரத்தம், மண்ணோடு சேர்ந்து பல் துண்டுகள். மேல் வரிசை இடது முன் பல்லில் பாதியைக் காணோம்!! அனைவரும் என்னைச் சுற்றி நலம் விசாரிக்க, வலியும் அவமானமும் (ஏம்பா இது மாதிரி சின்னப் பசங்கள எல்லாம் விளையாட்டுக்கு சேக்கறீங்க? கூட்டத்தில் யாரோ!) சேர்ந்து நிலை குலைந்து போனேன். "பந்தை நல்லாப் பாருடான்னு சொன்னால், இப்படியா பிடிக்காமல் வாயால கடிப்பான்?" என்று ஸ்ரீனி நினைத்திருப்பானோ? ஆகமொத்தம் ரங்கநாதனுக்கான சவால் ஒரே பந்தில் புஸ் என்று போனது."Practice matchல பல் ஒடஞ்ச பயல்' என்ற புனைப்பெயர் (விருமாண்டி படத்தில் கமல் ஹாசனை "அதான்யா ,சிங்கபூர்ல சவுக்கடி வாங்கினானே? அவன் தான்" என்று அறிமுகப்படுதுவார்களே? அது மாதிரி!!) ஒட்டி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளை அது போல் அவமானம் ஏதும் நடக்கவில்லை. அந்த வருடம், பள்ளி அணிக்கு தேர்வு செய்யப்படவில்லையானாலும் அனைத்துப் போட்டிகளையும் கூடச் சென்று பார்த்தேன். மதுரா காலேஜ் பள்ளி (M .C . Higher Secondary School ) உடனான போட்டியில் எங்கள் அணி வெங்கட்ராமன் வீசிய பந்து, எதிர் தரப்பில் ஆடிய வெங்கட்ரமணன் என்ற ஒரு சிறந்த ஆட்டக்காரனின் பேட் கைப்பிடியில் பட்டு, அவர் நெற்றியில் அடித்து உயரே எழும்பி fine legஇல் பிடிபட்டு அவுட் ஆனார். நெற்றியை தேய்த்துக் கொண்டே வெங்கட்ரமணன் வெளியே வந்த காட்சி இன்றும் தத்ரூபமாக என் மனக் கண்ணில் உள்ளது. அடுத்த ஆண்டு (10 ஆம் வகுப்பில்) பள்ளி கிரிக்கெட் அணியில் ரங்கநாதன் காலி செய்த இடத்தைப் பிடித்தேன். என்னுடன் அணியில் விளையாடிய, என் நினைவிற்கு வரும் வேறு பெயர்கள் V . ஸ்ரீனிவாசன், பார்த்தசாரதி, சேதுபதி, கல்யாணராமன், சாமுவேல், ஸ்பெர்ஜென் ஞானமுத்து, சத்யராஜ் மற்றும் N.C. சேகர் (ராகுல் டிராவிட் காலத்திற்கு முன்பே N.C.சேகர் அடிக்கும் நேர்த்தியான on-driveகளை இன்றும் நான் மனதில் அவ்வப்போது replay செய்து பார்ப்பேன்). அந்நாட்களில், பள்ளிப் போட்டிகளைப் பார்க்க T.V.S. நகர் வாசிகள் திரளாக வருவார்கள். Orthodox மட்டையாளன் என்று பேர் வாங்கிய நான், பெரும்பாலும் கடைசியாகத்தான் விளையாட வருவேன். V .ஸ்ரீநிவாசன், சாமுவேல் போன்றவர்கள் அதிரடி ஆட்டக்காரர்கள்.ஒரு போட்டியில், சாமுவேல் பட்டாசு கிளப்ப, 5 ஓவர்களில் 45 ரன்கள் எடுத்தோம். ஒரு பெரியவர் '5 ஓவர்ல 45 ரன்ஸ் வெளுத்திட்டங்கய்யா!' என்று புகழுந்து சென்றது இன்னும் பசுமையாக ஞாபகத்தில் உள்ளது. பள்ளி அணியில் விளையாடும் போது நினைத்துக் கொள்வேன் "நானும் ஒரு கிரிக்கெட் பேட் வாங்க வேண்டும்". அதன் பிறகு SBI காலனியில் CLIVE கிரிக்கெட் அணி என்று ஒன்று தொடங்கி அரசரடி மைதானத்தில் பல போட்டிகள் விளையாடினோம்.
மதுரை மாவட்ட பள்ளி கிரிக்கெட் அணியில் (district schools) அப்பொழுது பிரசித்தி பெற்ற மூவர் வெங்கட்ராமன், வெங்கட்ரமணன் மற்றும் (டி. என்.) விஸ்வநாதன். The 3Vs என்று புகழப்பட்ட அவர்களின் விளயட்டுப் பிரதாபங்கள் அநேகம். 1983ஆம் வருடம் (12வது படிக்கையில்) மாவட்டப் பள்ளிகள் கிரிக்கெட் அணி தேர்வில் கலந்துகொள்ள 'விளையாட்டாக' முடிவு செய்தோம். என்ன காரணம் ஞாபகமில்லை, அன்று எங்களிடம் பள்ளியின் எந்த கிரிக்கெட் உபகரணங்களும் இல்லை. 'வெறும் கை வளவர்களாக' டி. வி. எஸ். லக்ஷ்மி பள்ளி மைதனத்தில் நுழைந்தோம். மைதானம் எங்கும் வெள்ளை உடையில் மதுரை மாவட்டம் முழுவதிலிருந்தும் வந்திருந்த பள்ளி மாணவர்கள் குவிந்திருந்தார்கள். ஐந்து பைசா நாணயத்தைச் சுண்டிப்போட்டால் அது ஒரு வெள்ளை உடை மாணவன் தலையில் தான் விழும், அவ்வளவு கூட்டம். அவர்களில் பலர், (வெங்கட்ரமணன் போல்) சென்ற ஆண்டிலேயே மாவட்ட அணையில் விளையாடியவர்கள். திரு. ஸ்ரீதர் (சீனியர் டிஸ்டிரிக்ட் கேப்டன்) அவர்கள் தான் தேர்வுக்குழுவின் தலைவர். மாணவர்களை வரிசையாக நிறுத்தி, பந்து வீச்சாளர்கள் (வேகப்பந்து, சுழற்ப்பந்து), மட்டையாளர்கள் (துவக்க, நடுவரிசை), விக்கெட் கீபெர்கள் என்று தரம் பிரித்து பேர் எடுக்க ஆரம்பித்தார். விக்கெட் கீபர் கையுறை இல்லாத காரணத்தால், கால் சுழற்ப்பந்து வீச்சாளன் மற்றும் மட்டையாளானாக (leg spinner cum batsman) பேர் கொடுத்தேன். எனக்கான வாய்ப்பும் வந்தது. குனிந்து நிமிருவதற்க்குள் வரிசையாக பல பந்து வீச்சாளர்கள் பந்து வீச, மாறி மாறி அடித்தேன். கொஞ்ச நேரம் பந்தும் வீசினேன். எல்லாம் முடிந்த பிறகு, மாணவர்கள் அனைவரையும் மைதானத்தில் அமரச் செய்து திரு. ஸ்ரீதர் அவர்களும், மற்றவர்களும், மைதானத்தின் மறு முனையில் உள்ள அறைக்குச் சென்றார்கள். தேர்வு ஆவோமா என்ற ஆர்வத்தில் அனைவரும் எதிர்பார்ப்புடன் அமர்ந்தோம். கொஞ்ச நேரத்தில், வெங்கடரமணன் அறையில் இருந்து தனியாக எங்களை நோக்கி வந்தார்.' ஸ்ரீகுமார் யாருப்பா?' என்றார். நான் திகைப்புடன் கையைத் தூக்கினேன். என்னைப் பார்த்து ஒரு தெளிவற்ற வகையில் தலையாட்டி விட்டு சென்றார். அரை மணி நேரம் போயிருக்கும் அணி தேர்வாளர்கள், திரு. ஸ்ரீதர் தலைமையில் வெளியே வந்தார்கள். வரிசையாகப் தேர்வு பெற்றவர்கள் பெயர்களை திரு.ஸ்ரீதர் வாசித்தார்."ஸ்ரீகுமார், டி. வி. எஸ். உயர்நிலைப்பள்ளி".....என் பெயர் வாசிக்கப் பட்டதைக் கேட்டு நிஜம்தானா என்று என்னையே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன். நிஜம் தான்! முதற்கட்டத் தேர்வில், 22 பேர்களில் ஒருவனாகத் தேர்வு செய்யப் பட்டிருந்தேன். மறு நாள் இரண்டாம் கட்டத் தேர்வு என்று அறிவித்தார் திரு. ஸ்ரீதர். கால்கள் தரையில் பாவாமல் வீடு சென்றடைந்தேன். மறுநாள், 22 பேரையும் இரு அணிகளாகப் பிரித்தார் திரு ஸ்ரீதர். எங்கள் அணி முதலில் பாட்டிங். ஒபெனிங் மட்டையாளராக சுதர்சன் (சென்ற வருடமே தேர்வானவர்) மற்றும் இன்னொருவர் களமிறங்கினர். ஓரிரு ஓவர்களிலேயே , சுதர்சனை வெளியே வரச் சொன்னார் திரு.ஸ்ரீதர். கால் காப்புடனும், படபடக்கும் இதயத்துடனும் உட்கார்ந்திருந்த என்னை, 'போ' என்று சைகை செய்தார். நடுக்கத்தைக் கட்டிக்கொள்ளாமல் guard எடுத்து, பந்து வீச்சாள்ர்களை எதிர்கொள்ளத் தயாரானேன். கொஞ்சம் ஓவர்கள் சுமாராகவே ஆடியிருப்பேன். உள்ளே வரும்படி திரு. ஸ்ரீதர் சைகை செய்தார். 'அப்பாடி, முடிந்தது!' என்று ஆஸ்வாசமாக வெளியே வந்தேன். 'கால் காப்பை கழற்றாதே", என்றார் திரு ஸ்ரீதர். 'அய்யகோ இன்னும் முடியவில்லையா' என்ற திகைப்பில் காத்திருந்தேன். பின் தான் தெரிந்தது...எனக்கும், ஒரு இடது கை மட்டையாளருக்கும் ஒரே இடத்திற்குப் போட்டி என்று!! அவர் எற்கனவே ஸ்ரீசக்ரா அணியில் விளையாடுபவர். அவர் கொஞ்ச நேரம் பேட் செய்தார். பின் மீண்டும் என்னை பேட் செய்யச் சொன்னார்கள். இம்முறையும் அதிக தன்னம்பிக்கையுடன் நன்றாகவே ஆடினேன். ஓரிரண்டு ஓவர்கள் போயிருக்கும். திரு. ஸ்ரீதர், களத்தில் மிட் ஆப் பகுதியில் field செய்து கொண்டிருந்த ஒருவரிடம் பந்தை வீசி, 'நீ போடு' என்றார். அவரும் சென்ற ஆண்டே தேர்வான ஒரு வேகப்பந்து வீச்சாளர். மிடுக்கான தன் உதா கழுத்துப் பட்டையுடனான வெள்ளை sweaterஐ கழற்றி நடுவரிடம் கொடுத்து, தன பந்து வீச்சு ஓட்ட அளவைத் துள்ளி அளந்து, காலால் கற கறவென குறித்து, பந்தைத் தன் கால்சராயில் தேய்த்த வண்ணம் என்னை பார்த்தார். சரி தான்...இன்னொரு பந்து வீச்சாளர் தானே. பார்த்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டு நான் அவரை எதிர் கொள்ளத் தயாரானேன். லாகவமாக ஓடி வந்து வீசினார். பின்காலில் சென்று விளையாடலாம் என்று எண்ணி நான் நகர நினைக்கும் கண்ணிமைப் பொழுதில் விர்ரென்ற ஓசையுடன், கழுத்தளவு உயரத்தில் என்னைக் கடந்து, விக்கெட் கீப்பர் கையுறையை 'தொப்' என்ற ஓசையுடன் சென்றடைந்தது பந்து. அவ்வளவு வேகம்!! நான் அதிர்ந்து போய் நிமிர, பந்து வீசிய வேகத்தில் ஏறக்குறைய என்னிடமே வந்திருந்த அந்த வீச்சாளார், என்னை ஆற அமர பார்த்து விட்டு, திரும்பி தன பந்து வீச்சு ஓட்ட இலக்கை நோக்கி மீண்டும் நடந்தார். ஸ்ரீகாந்த் நாராயணசாமி என்ற அன்பு நண்பரின் முதல் அறிமுகம் அப்படித்தான் நடந்தது!! மிகுந்த சிரத்தையுடன் அடுத்த பந்தை எதிர்கொண்டேன். அடுத்த நான்கு பந்துகளை நன்றாகவே தடுத்தாடினேன். அவர் வீசிய பந்துகள் என் மட்டையில் பட்ட அதிர்வை இன்னும் உணர்கிறேன். கடைசி பந்தை கவர் திசையில் அடித்தேன். ஒரு ஓவர் தாக்குப் பிடித்த திருப்தி!! அடுத்த ஓவரின் மூன்றாவது பந்து என்று நினைக்கிறேன். அளவு குறைவாக வந்த பந்தை சுழன்று pull செய்தேன். எல்லைக்கோட்டை நோக்கிப் பறந்தது பந்து. அது எல்லைக் கோட்டைத் தாண்டவும், 'போதும் வாப்பா' என்று திரு. ஸ்ரீதர் கூப்பிடவும் சரியாக இருந்தது! எல்லாம் முடிந்து, தேர்வானவர்கள் பட்டியலை வாசித்தார் திரு. ஸ்ரீதர். 15 பேர்களில் நானும் ஒருவன்!! என் குதூகலத்திற்கு அளவே இல்லை. ரமணன், சுதர்சனன், பிரகாஷ் பாபு, இன்டிகாபுதீன், ராஜேந்திரன், ராமதாஸ், தீபக், ரங்கநாத் பிரசாத், மற்றும் ஸ்ரீகாந்த் நாராயணசாமி பெயர்கள் நினைவில் வருகின்றது. விகாசா பள்ளி மைதானத்தில் பயிற்சி. தினமும், SBI காலனியில் இருந்து சைக்கிளில் செல்வேன். தேர்வான 15 பேரில், லீக் போட்டியில் முன்னப் பின்ன ஆடிய அனுபவம் அறவே இல்லாத (தத்தி!!) நான் ஒருவன் மட்டும் தான் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய மற்ற அனைவருக்குமே சொந்த கிரிக்கெட் உபகரணங்கள், என்னைத் தவிர! பயிற்சியின் போது நினைத்துக் கொள்வேன் "நானும் ஒரு பேட் வாங்க வேண்டும்". விகாசா மைதானத்தில் நடந்த பயிற்சி காலம் நான் மறக்க முடியாத ஒன்று. அந்த வருடம் பி.ர். தேவர் கோப்பைக்காக இரண்டு போட்டிகள் ஆடினோம். இரண்டாம் போட்டி உடுமலைப்பேட்டை மாவட்டத்துடன். செந்தில்நாதன் அப்பொழுதுதான் பிரபலமாகிக் கொண்டிருந்தார். மழையால் பாதிக்கப்பட்ட அந்தப் போட்டியில் tossஇல் தோற்றோம். இரண்டு போட்டிகளிலும் நான் 12th man. மதுரை மாவட்டப் பள்ளி அணியில் ஆடியது என் கிரிக்கெட் வாழ்க்கையின் சிகரம் என்று சொல்லலாம். மாவட்ட அணியில் ஆடிய ஜோரில், மதுரை லீக் போட்டியில் Jolly Rovers அணியில் சேர்ந்தேன். அந்த சமயத்தில் +2 முடித்த கையேடு அமெரிக்கன் கல்லூரியில் விலங்கியல் பிரிவில் சேர்ந்திருந்தேன். Jolly Rovers அணியில் துவக்க மட்டையாளனாக என்னை ஒருவாறாக அடையாளம் காட்டிக் கொண்ட சமயத்தில், கால்நடை மருத்துவ கல்லூரியில் தேர்வு. சென்னைக்கு மாற்றம் ...அதோடு மதுரை கிரிக்கெட் சகாப்தமும் முடிந்தது.
சென்னையில், கால்நடை மருத்துவக் கல்லுரி அணியில் 5 ஆண்டுகளும் ஆடினேன். தமிழ்நாடு விவசாய பல்கலைக் கழகக் கல்லூரி கிரிக்கெட் போட்டியில், என் தலைமையில் நாங்கள் முதலிடம் பிடித்தோம்.
மூன்று முறை தமிழ் நாடு விவசாயப்ப் பலகலைக்கழக அணிக்கு தென் மண்டல பல்கலைக்கழகப் போட்டியில் (South Zone Inter-university, ) ஆடினேன். பெங்களுருவில் (1986 என்று ஞாபகம்) நடந்த போட்டியில், fixtures பார்த்தபோது ஒரு இன்ப அதிர்ச்சி...எதிர் அணி மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்!!1983 மாவட்ட அணியின் முக்கிய புள்ளிகளை (ரமணன், ஸ்ரீகாந்த், ராஜி, பிரகாஷ் பாபு) எல்லாம் மீண்டும் (எதிரிகளாகச்) சந்திக்க ஓர் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் MKUவிடம் முதல் சுற்றிலேயே உதை. நான் 10 ஓவர்களில் 3 விக்கெட் எடுத்தேன், 58 ரன்கள் கொடுத்து!! சாத்தி எடுத்திட்டாங்க. ரமணன் விக்கெட் எடுத்த மகிழ்ச்சி மட்டும் தான் மிஞ்சியது!!
கல்லூரிக் காலத்தில், மூன்றாம் மற்றும் நான்காம் பிரிவில், ஹரநாத் கிரிக்கெட் கிளப் என்ற வட சென்னையை சேர்ந்த அணிக்கு, TNCA லீக் போட்டிகளில் ஆடினேன். அருமையான போட்டி மனப்பான்மை உள்ள ஒரு அணி அது. ஒரு முறை விஜய் கிரிக்கெட் கிளப் (தற்பொழுது TNCA முதல் பிரிவில் உள்ள ஒரு தரமான அணி) உடனான play-off போட்டியில் 136 ரன்கள் தேவைப்பட 70 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்தோம். நானும், கணபதி பிரசாத் என்றவரும் சேர்ந்து மீதம் ரன்களை அடித்து டீம் ஜெயிக்க, அடுத்த பிரிவிற்கு முன்னேறினோம். கல்லூரி மற்றும், லீக் அணிகளில் ஆடும்போதும், 'ஒரு கிரிக்கெட் பேட் வாங்க வேண்டும்' என்ற நினைப்பு மட்டும் என்னை விட்டுப் போகவேயில்லை.
கல்லூரிக்காலம் முடிந்து, அரசு கால்நடை உதவி மருத்துவனாக கீழ்ப்பெண்ணாத்தூர் (திருவண்ணாமலை) கால்நடை மருந்தகத்தில் சேர்ந்தது எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தியது. வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்ய வேண்டி இருந்ததால் சென்னையில் நடக்கும்போட்டிகளுக்கு ஒழுங்காகப் போக முடியாமல் எனது லீக் கிரிக்கெட் வாழ்க்கை தானாக முடிந்து போனது. 1994ஆம் வருடம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியனாக மீண்டும் கல்லூரி வாழ்க்கை தொடங்கியது. 1995ஆம் வருடம் முதல் இன்று வரை (!!??) கல்லூரி பேராசிரியர் அணிக்கு விளையாடுகிறேன். ராமச்சந்திர மருத்துவக் கல்லூரி நடத்தும் சரத்சந்திரா நினைவு போட்டி மற்றும், மெட்ராஸ் கிறிஸ்டின் கல்லூரி நடத்தும் பென்னெட் அல்பர்ட் நினைவுப் போட்டி ஆகிய இரண்டு போட்டிகளில் எங்கள் கல்லூரி அணி ஒரு காலத்தில் இரண்டாம் இடத்தில் வந்துள்ளது. ஒரு போட்டியில் சிறந்த மட்டையாளன் விருதும் பெற்றிருக்கிறேன், வரிசையாக மூன்று மட்ச்களில் அரைசதம் அடித்து. மூன்று வருடங்கள் ஊட்டி HPF அணிக்கு NDCA லீக் போட்டியில் ஆடினேன். அழகான ஊட்டி மைதானங்களில் ஆட கொடுப்பினை வேண்டும்!
தற்பொழுது சென்னையில் உள்ள கல்லூரி அணிகளிலேயே 'கிழட்டு' அணி எங்கள் அணிதான்! எங்கள் அணி ஆட்டக்காரர்களின் நிகர வயது 45 இருக்கும்! ஒரு P D கேட்டே விட்டார்..."என்ன சார் வருஷா வருஷம் அதே கிழட்டு டீம் வருது. இளைய உதவிப் பேராசிரியர்கள் இல்லையா, அல்லது அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க மறுக்கிறீர்களா" என்று. ஒவ்வொரு மாட்சிலும், முதல் இரன்டு ஓவர்கள் போன பிறகு தான் 11வது ஆளே வருவார். இருந்தாலும், இப்பொழுதும் ஒவ்வொரு மாட்ச் தொடங்கும் முன்னாலும், அதே குதூகலம், உற்சாகம் தான். மாட்ச் முடிந்த பிறகு வேறு விஷயம்!! எங்கெல்லாம் என்ன என்ன எலும்பு உள்ளது, என்னென்ன தசைகள் உள்ளது என்று தெளிவாகத் தெரிகின்றது!! இன்னும் எத்தனை நாட்களுக்கு இது நடக்கும் என்றும் தெரியாவில்லை. இந்த பேட் வாங்கவும் எண்ணம் மட்டும் எனோ நிறைவேறவில்லை. இனி அது தேவையும் இல்லை....அது கனவாகவே முடிந்த ஒரு நினைவாகப் போனது.
இருக்கையில் இருந்து எழுந்து சென்று, வருண் உள்ளே வைத்த அந்த புதிய SF பாட்டை எடுத்து வாஞ்சையையாக கையில் பிடித்துக் கொண்டேன். இரண்டு முறை கீழே தட்டி, கண் காணாத அந்தப் பந்து வீச்சாளரை எதிர்கொள்ள தயாரானேன்...மீண்டும்!!
(பி.கு.) 1987-88 வருடம், எதிர்பார்த்தது போல், ரமணா தமிழ்நாடு அணிக்கு ஆடினார். 1988இல் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட போது எனக்கு பெருமை பிடிபடவில்லை. ஏதோ நானே இந்தியாவுக்கு ஆடப் போவதுபோல் சந்தோஷம். ஏனோ தெரியவில்லை, ஒரு வரையறுக்கப்பட்ட ஓவர் போட்டி மற்றும் ஒரு test போட்டியோடு அவர் ஓரம் கட்டப்பட்டார். இத்தனைக்கும், நியூ ஸிலாந்து உடனான போட்டியில் மிக சிறப்பாகவே பந்து வீசியிருந்தார். இந்திய அணியில் அவருக்கு ஒரவஞ்சனை நிகழ்ந்ததாகவே சொல்லலாம்.சில மாதங்கள் முன் ராமச்சந்திர மருத்துவக்கல்லூரி மைதானத்தில், ஒரு போட்டியில் வழக்கம் போல் உதை வாங்கி விட்டுத் திரும்புகையில் ரமணனைச் சந்தித்தேன், ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு! என்னை அவருக்கு அத்தனை ஞாபகம் வரவில்லை...ரொம்ப கிழடாயிட்டேனோ?.
சில நிமிடங்கள் அவருடன் பழங்கதை பேசினேன். மறக்க முடியாத சந்திப்பு.
2 comments:
நான் மிகவும் ரசித்தேன் ஸ்ரீ உன்னுடைய எழுத்தை.. ஆனாலும் ஆளில்லாத கடைல டீ ஆத்த ஒரு மன திடம் வேணும்..
Post a Comment